இலங்கைக்கு எதிரான நேற்றைய 2வது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில், குறைந்த பந்துகளில் சதம் விளாசி அசத்தினார் கேப்டன் ரோகித் ஷர்மா. அவர் 43 பந்துகளில் 10 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் உதவியுடன், 118 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அப்போது வெறும் 13 ஓவர்களில், 165 ரன்களை குவித்திருந்தது. இதையடுத்து அடுத்ததாக பேட் செய்ய யாரை அனுப்புவது என பெவிலியன் பகுதியில் இருந்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சைகை மூலம் ரோகித்திடம் கேட்டார். ஏனெனில் ரோகித் பெவிலியன் திரும்பிய பிறகு அடுத்த பேட்ஸ்மேனை அனுப்ப நேரம் எடுத்துவிடும் என்பதால் அவசரமாக ரவி சாஸ்திரி இதை கேட்டார்.
இதை பார்த்த ரோகித் ஷர்மா, குனிந்து நின்று, விக்கெட் கீப்பிங் செய்பவரை போல ஜாடை காட்டினார். இதை கவனிக்காத களத்தில் நின்ற சக தொடக்க வீரர் ராகுல், ரோகித்தின் பின்னால் வந்து சதம் அடித்ததற்காக அவரை தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் ரோகித்தின் கை சிக்னலை பார்த்த அரங்கிலிருந்த ரசிகர்களும், ரவி சாஸ்திரியும் அவர் டோணியை வரச் சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டனர்.
அதிர்ந்த மைதானம் ரோகித் ஷர்மாவின் சிக்னலை பார்த்த ரசிகர்கள் டோணி களமிறங்க இருந்ததை அறிந்ததும் ஆரவார கோஷங்களை எழுப்பினர். வழக்கத்தைவிட டோணி முன்கூட்டியே, அதாவது ஒன்டவுன் இடத்தில் இறக்கிவிடப்பட்டார். அவர் 21 பந்துகளில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உதவியோடு, 28 ரன்களில் அவுட்டானார்.
பாண்ட்யா போன்ற இளம் அதிரடி வீரர்களை தவிர்த்து டோணியை முன்கூட்டியே ரோகித் களமிறங்கச் செய்ததில் காரணம் இருந்தது. முக்கிய கட்டத்தில் இறங்கிய டோணி ரோகித்-ராகுல் ஜோடி, நன்கு துவக்கம் ஏற்படுத்தி கொடுத்த நிலையில்,
இளம் வீரர்கள் வந்து அவசர கதியில் ஷாட்டுகளை அடித்து எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை ஏறச் செய்யாமல் விட்டுவிட கூடாது என்பதால், அதிரடியும் தெரிந்த, சூழ்நிலைக்கு தக்க விளையாடவும் தெரிந்த டோணியை முன்கூட்டியே களமிறக்கினார் ரோகித்.
அதேபோலத்தான் டோணியும், அடிக்க வேண்டிய பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு அனுப்பிவிட்டு ரிஸ்க்கான பந்துகளில் ரன்களை ஓடினார். இதனால் இந்திய அணியின், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன் என்ற இமாலய ரன் குவிப்பு சாத்தியமானது.
இதனிடையே ரோகித் ஷர்மா டோணி மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மரியாதைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ரோகித்தை ஓப்பனிங் இடத்தில் இறங்க வைத்து அவரை வளர்த்து விட்டவர் டோணிதான் என்பது நெட்டிசன்கள் புகழ்ச்சிக்கு மற்ரொரு காரணம்.

0 comments: