ஒலி, ஒளி உலகில் மட்டுமல்ல, ரோபோவியலிலும், ஜப்பானின், சோனி முன்னோடி தான். பல ஆண்டுகளுக்கு, 'அய்போ' என்ற ரோபோ நாய் குட்டியை தயாரித்து, இணையத்தின் மூலம், ஜப்பானில் மட்டும் விற்பனை செய்தது, சோனி. அதற்கு, அமோக வரவேற்பு இருந்தாலும், ஏனோ திடீரென, அதன் உற்பத்தியை நிறுத்தியது. சரியாக, 11 ஆண்டுகளுக்கு பின், மீண்டும், அய்போவை, சமீபத்தில் விற்பனைக்கு, சோனி விடுத்துள்ளது.
ஆனால், இந்த முறை, அதன் மூளையாக செயல்படும் மென்பொருளை, மாதாந்திர சந்தா முறையில், புதுப்பிக்க வேண்டும் என, நிபந்தனை விதித்திருக்கிறது. ஏன்? அய்போ, நாய் குட்டியின் உடலை போல அல்லாமல், மென்பொருள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்பதாலும், அதன் மூலமும், லாபம் பார்க்கலாம் என்பதாலும், இந்த ஏற்பாடு. தவிர, மூன்று ஆண்டுகளுக்கு, பராமரிப்பு சேவை கட்டணத்தையும், இந்த முறை சோனி வசூலிக்கிறது.
அய்போ ரோபோ, தன் வீட்டினரை பார்த்ததும் வாலை ஆட்டுவது, தாவி ஓடுவது, இங்கும் அங்கும் உலாவுவது, அரிப்பெடுத்த அசல் நாயை போலவே, காலால் சொறிந்து கொள்வது போன்ற, பல குறும்புகளை செய்யும். ரோபோ நாய் குட்டி போன்றவை, குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தனிமையில் இருக்கும் பெரியவர்களுக்கும், பொழுதை போக்க உதவும் என்கிறது, சோனி. ஜப்பானில், வீட்டில் வசிக்கும் முதியோரின் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments: