தமிழகம் மட்டும் அல்லாது இந்திய சினிமா ரசிகர்களையே கட்டி போட்டு வைத்திருக்கும் மூன்றெழுத்து மந்திரம் என்றால் அது ரஜினி. நடிகர் ரஜினி இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
இன்று காலை 6 மணி முதலே ரஜினி ரசிகர் மன்றத்தினர் ரசிகர் மன்றக் கொடியை கையில் ஏந்தியவாறு போயஸ் கார்டன் நுழைவு சாலையில் இருந்து ரஜினி இல்லம் நோக்கி அணி அணியாக வரத் தொடங்கினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லம் வரை ரசிகர்கள் திரண்டு நின்றதால் முன் எச்சரிக்கையாக ரசிகர்களை போலீசார் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றினர்.
ரஜினி இல்லத்தை இணைக்கும் மற்றொரு சாலையான ராதாகிருஷ்ணன் சாலை அருகே ரசிகர்களை போலீசார் வெளியேற்றிவிட்டனர்.இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் ரசிகர்கள் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருக்கின்றனர்.
கடந்த பிறந்தநாளின் போது ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் திடீரென ரசிகர்கள் மத்தியில் தோன்றி பேசினார். அது போன்றே இந்த முறையும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பால் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

0 comments: